இளைய தலைமுறையினரிடத்தில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி வசூல் நட்சத்திரமான சிலம்பரசன்TR முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் மூலம் சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விறுவிறுப்பாக தயாராகும் ‘அரசன்’ திரைப்படம் – தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்றது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி , ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான அரங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விரைவில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் , அதில் சிலம்பரசன் TR உடன் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு பெறும் வகையில் அனைத்து பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்த திரைப்படத்தை எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது.
இந்நிலையில் சிலம்பரசன் TR தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேர படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதனால் என்னுடைய சர்க்காடியன் ரிதம் ( உயிரியல் சுழற்சி கடிகாரம்) குழப்பம் அடைந்திருக்கிறது.” என பதிவிட்டிருக்கிறார்.
இதன் மூலம் சிலம்பரசன் TR இப்படத்தின் மீது பேரார்வம் காட்டி வருவதும், படக் குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால்.. ரசிகர்கள் எல்லையில்லா அளவிற்கு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.